
கிரிக்கெட் வரலாற்றில் எல்லோரும் வியக்கும் அள்விற்கு பல சாதனைகளை குவித்துகொண்டு செல்லும் சாதனை வீரராக சச்சின் காணப்படுகிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 14 ஆயிரம் ஓட்டங்களை கடந்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சச்சினை சாரும்.
சச்சின் இதுவரை 171 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 49 சதங்களையும், 57 அரைச்சதங்களையும் பெற்றுள்ளதோடு இதுவரை 14002 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இதில் அதிகபட்ச ஓட்டமாக 248 ஓட்டங்களை பெற்றமை குறப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டியில் 56.22 சராசரி வைத்துள்ள சச்சின், ஒரு நாள் போட்டியில் 45.12 சராசரி வைத்துள்ளார்.
ஐ.சி .சி விருது வழங்கு விழா ஒக்டோபர் 6 ஆம் திகதி பெங்களூரில் நடந்தது. இதில் 2010 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் மற்றும் மக்களின் மனம் கவர்ந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளை பெற்றார் சச்சின். இந்த விருதுகளை பெற முக்கிய காரணம் பயிற்சியாளர் கிறிஸ்டன்"என்று இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ் மேன் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 2009, ஆகஸ்ட் 24ஆம் திகதி முதல் 2010, ஆகஸ்ட் 10ஆம் திகதி வரையிலான காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஐ.சி.சி விருதுக்கான காலக் கட்டத்தில், சச்சின் 10 டெஸ்ட் போட்டிகளில் 1064 ஓட்டங்கள் (81.84 சராசரி) எடுத்துள்ளார். 17 ஒரு நாள் போட்டிகளில் 914 ஓட்டங்கள் (65.28 சராசரி) எடுத்துள்ளார். சச்சினின் இத்தகைய சிறந்த ஆட்டத்திற்காக ஐ.சி.சி. ஆண்டின்( 2009 -2010) சிறந்த வீரருக்கான விருதை முதல் முறையாக கைப்பற்றினார்.






